கல்வியை தனியாரிடம் தாரை வார்க்கக் கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நாமக்கல் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நிறைவேற்றி உள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் எருமப்பட்டி வட்டார செயலாளர் ராமராசு, மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் அனைத்து பதவி உயர்வும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆங்கில வழி துவங்கப்பட்ட துவக்கப்பள்ளியில், அதற்கென தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். 2006 ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிக்கால பணப்பயன்கள் வழங்கிட வேண்டும்.
தொடக்கக் கல்வி இடைநிலை ஆசிரியருக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கல்வியை தனியாரிடம் தாரை வார்க்க கூடாது. புதிய மாதிரிப் பள்ளிகள் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
நாமக்கல் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19ம் தேதி அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுடில்லியில் பேரணி நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர் நடேசன், நாமக்கல் வட்டார தலைவர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 comments:
கருத்துரையிடுக