சென்னை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து கடந்த 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தமிழக முழுவதும் 70 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில், உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் மாதம் இறுதி வரை இந்த திருத்தும் பணி நடக்கிறது. அதன் பிறகு பள்ளியில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் ஆசிரியர்கள் விடை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் கோடையில் விடுமுறை கழிக்க முடிவதில்லை.
இதனால், விடைத்தாள் திருத்தும் நாட்களை ஈடு செய்யும் விடுப்பாக எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒளிமறைவற்ற பணிமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று காலை 8.30 மணியளவில் தமிழக முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்வுத்துறை அதிகாரிகள் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு காலை 10 மணிக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் தன லட்சுமி மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர் சங்கரா வித்யாஷ்டிரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 1,500 ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விடைத்தாள் திருத்தும் பணி 1 மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக