தமிழகத்தில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 571 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் சனிக்கிழமை (மே 16) வரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 571 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் சேர சனிக்கிழமை (மே 16) வரை மொத்தம் 28,171 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கடந்த மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு நாள்களில் மொத்தம் 28,171 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றனர்.

0 comments:
கருத்துரையிடுக