விருதுநகர் மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன கணினி வகுப்பறைகள் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
தற்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் தங்களிடம் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளதாகக் கூறி கிராமப் புற மாணவர்களை போட்டி போட்டு சேர்த்து வருகின்றன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனவே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அதிகரிக்கச் செய்யவும் புதிய திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை நடைமுறைபடுத்த உள்ளது.
இதன் படி மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்குள்ள பள்ளிகள் மற்றும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை இனம் கண்டு, அப்பள்ளிகளில் உண்மை போல் செயல்படும் கணினி வகுப்பு அறைகள் அமைக்கும் புதிய திட்டத்தை நிகழாண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் 40 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் வகுப்பறை அமைக்கப்படும். இங்கு குளிர்சாதன வசதியுடன் கணினி, வெப்கேமரா, புரொஜக்டர் மற்றும் இணையதள வசதிகளும் செய்து தரப்படும்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடங்களும் ஆசிரியர்கள் கற்பிப்பது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு கணினிமயமாகப்பட்ட வகுப்பறைகளில் உள்ள அகன்ற திரையில் ஒளிபரப்பப்படும்.
இதனால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிப்பதுடன், காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து அவர்கள் தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். தற்போது, இவ்வகுப்புகளை தொடங்குவதற்கு விருதுநகர் மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்து வருகிறோம்.
அதற்கான திட்ட மதிப்பீட்டையும் தயாரித்து பள்ளிக் கல்வித் துறை மூலம், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக