துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்க உள்ளது.
தமிழகத்தில் பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.எஸ்.சி. ரேடியாலஜி, பி.எஸ்.சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்பூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 6 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 480 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7,098 இடங்களும் என மொத்தம் 7,578 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகள் அனைத்தும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பாகும்.
இந்தப் படிப்புகளில் சேருவதற்காக 20,940 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிப் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்க உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
முதல் நாளான திங்கள்கிழமை மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் www. tnhealth.org,www.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் "செயலர், தேர்வுக் குழு' என்ற பெயரில் ரூ. 200-க்கு வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக