2016-17ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது : தொலைநிலை கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
இதில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
பிராக்டிக்கல் வகுப்புகளையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
இதற்காக தமிழகத்தில் பல கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார்.
யுஜிசி துணைத் தலைவர் எச். தேவராஜ் கூறுகையில்
ஏற்கனவே அடிப்படை அறிவியல் கல்வியை சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. அது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம்.
இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

0 comments:
கருத்துரையிடுக