ஜூலை-செப்., போராட்டங்களுக்கு ஆதரவு தர அரசு ஊழியர் சங்கம் முடிவு
ஈரோடு: ''ஜூலை, 11 மற்றும் செப்., 2ம் தேதி நடக்க உள்ள போராட்டங்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு வழங்கும்,'' என, மாநில தலைவர் தமிழ்செல்வி கூறினார்.ஈரோட்டில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அப்படியே ஏற்போம் என்ற மாநில அரசின் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள ஏராளமான முரண்பாடுகளை நீக்காமல், தமிழகத்தில் அமல்படுத்தினால், எங்களுக்கு பயன் தராது. இந்த உயர்வை அப்படியே அமல்படுத்தினால், கடைநிலையில் உள்ள உதவியாளர்களுக்கு, 13 ஆண்டுக்குபின், 750 ரூபாய் மட்டுமே உயர்வு கிடைக்கும்.
இது மிகவும் குறைவானது. ஆரம்ப நிலை பணியாளருக்கு குறைந்த பட்ச ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கடந்த, பிப்., மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டத்தில், எங்களது, 10 கோரிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருதல், காலமுறை ஊதியத்தை அமல்படுத்துதல் போன்றவைகளை இன்னும் நிறைவேற்றவில்லை. கடந்த முறை இருந்த அதே அரசு மீண்டும் பொறுப்பேற்றாலும், புதிய அரசாக கருதி, எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவோம். அரசின் நடவடிக்கைக்குப்பின், எங்கள் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். இதற்கிடையில், ஜூலை, 11 மற்றும், செப்., 2ல் நடக்க உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு, ஆதரவு வழங்க உள்ளோம். இதுபற்றி வரும், 3ம் தேதி மதுரையில் நடக்க உள்ள மாநில செயற்குழுவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக