ஒரே முகவரியில் ஏராளமான சிம் கார்டுகள் விற்பனை: போலி சிம் கார்டுகள் பற்றிய மோசடி அம்பலம்
கோவை: கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாக கூறப்படும் நிலையில், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் இலக்கை எட்ட ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவை சேர்ந்த சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவரே இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் பட்டத்தை விரிவுபடுத்தவும், விற்பனை இலக்கை எட்டவும் ஒருவரது அடையாளம் மற்றும் இருப்பிட சான்றிதழ் பயன்படுத்தி எண்ணற்ற சிம்கார்டுகளை புலக்கத்தில் விடுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். திருப்பூர், சென்னை போன்ற தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் இதன் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புலக்கத்தில் உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஒரே விலாசத்தில் பல சிம்கார்டுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண், தனக்கே தெரியாமல் தம் பெயரில் நான்கு சிம்கார்டுகள் புலக்கத்தில் உள்ளதாக கோவை மாநகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலி சிம் கார்டுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக