தியானம் என்பது தியான் என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ்வடிவம்.
பழமை வாய்ந்த தமிழில் தியான் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு நிகரான ‘தான்’ என்ற சொல் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்தது.
இடையில் அதன் பயன்பாட்டை இழந்து இப்போது ‘தியானம்’ என்று ஏதோ ஒரு செயலைக் குறிப்பது போன்ற தவறான பொருள் கொண்ட சொல் வழக்கு உருவாகிவிட்டது.
‘தான்’ என்று சொல்லும்போது ‘அதைச் செய்’ அல்லது ‘அதைச் செய்யாதே’ என்று சொல்வது சாத்தியமில்லை.
தான் தானாயிருத்தல், ‘தன்னுணர்வு’ என்பது இருப்பு நிலை,
உன் உண்மையான இயல்பு நிலை தவிர வேறொன்றுமில்லை.
ஓஷோ தியானத்தைப் பற்றிப் பேசுகையில்
அந்த உன் ‘தானாயிருக்கும்’ நிலையிலிருந்தே நீ வாழ வேண்டும், செயல்பட வேண்டும்.
அப்போது எல்லாமே ஒரு இசைவுக்குள், இயற்கையின் லயத்திற்குள் விழும் என்கிறார்.
அதை இப்போது நீ இழந்து விட்டாய்,
இயந்திரமாய், கட்டாயமாய், ஒரு திணிப்பில், ஒரு இறுக்கத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறாய், இதிலிருந்து வெளியே வர யுக்திகளைச் சொல்கிறேன் என்கிறார்.
இதற்கு ஓஷோ ஒரு கதை சொல்வார்.
வீட்டில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. திடீரென வீடு தீப்பிடித்து விட்டது. தந்தை குழந்தைகளிடம் வந்து, வாருங்கள் வெளியே ஓடிவிடலாம் என்றார்.
ஆனால் குழந்தைகளோ வெகு ஆர்வமாய் விளையாட்டில் தன்னை மறந்து போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.
தந்தையின் குரலே அவைகளுக்கு கேட்கவில்லை. தந்தை உடனே குழந்தைகளிடம், வெளியே வந்து பாருங்கள், நீங்கள் விளையாட புது கால்பந்துகள், கிரிக்கெட் மட்டை, பந்து எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் என்றார்.
உடனே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பழைய விளையாட்டை விட்டுவிட்டு வெளியே ஓடி வந்தன. வெளியே வந்து பார்த்தால் தந்தை சொன்னது பொய்.
ஆனால் இப்போது வீடு தீப்பற்றி எரிவதை குழந்தைகளால் பார்க்க முடிந்தது. தங்களை காப்பாற்றிய தந்தைக்கு நன்றி கூறின.
இதுபோலத்தான் தியான யுக்திகள். உன்னை இந்த மனதின் விளையாட்டிலிருந்து விடுவிக்க சொல்லும் தந்திரம்தான்.
தியானயுக்திகளுக்கும் தியான நிலைக்கும் தொடர்பில்லை. நேரடியாக இல்லை,
ஆனால் தியான யுக்திகள் உனக்குத் தேவை. இல்லையென்றால் நீ மனதின் விளையாட்டையே உண்மையென எண்ணி மாய்ந்து போவாய்.
வீடே உலகமென எண்ணி மனப்பொந்திலேயே வாழ்ந்து விடுவாய்
. வெளியே இருக்கும் விரிந்த உலகம், உண்மை உலகம், தன்னுணர்வு உலகம் உனக்குத் தெரியாமலேயே போய்விடும்.
உன் மனதை விட்டு விட்டு உன் உண்மையான தன்னிலைக்கு வா .
--- ஓஷோ ---


0 comments:
கருத்துரையிடுக