இலவச கட்டாய கல்வி தொகையை தராவிட்டால் சேர்க்கை கிடையாது: தனியார் பள்ளிகள் சங்கம்
இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கான தொகையை தராவிட்டால், அடுத்த ஆண்டில், மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மாட்டோம் என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில பொது செயலாளர் நந்தகுமார் பேசினார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
மாநில பொது செயலாளர் நந்தகுமார் பேசியதாவது: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் முடிவை ஏற்க முடியாது. அப்படியானால், தனியார் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்படும் பல நிபந்தனைகள், நடைமுறைக்கு சாத்தியமற்றவை. 3 ஏக்கர் இடம் இருந்தால் மட்டுமே அனுமதி எனும் சட்டத்தை, அரசு பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
திருப்பூரில் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கும் பள்ளிகள், நகர ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸை வாபஸ் பெற வேண்டும்.
பிரச்னைகளை எதிர்கொள்ள, தனியார் பள்ளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு பலத்தை காட்ட வேண்டும். கெடுபிடி தொடர்ந்தால், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில், 25 சதவீத ஏழை மாணவர் சேர்க்கைக்கான நிதியை தராவிட்டால், அடுத்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க மாட்டோம்.
கல்வித்துறை, லஞ்சத்துறையாக மாறிவிட்டது. நிபந்தனையை காரணமாக காட்டி, பள்ளிகளிடம் பணம் பறிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நந்தகுமார் பேசினார்.

0 comments:
கருத்துரையிடுக