காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
போராட்டக் குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்துப் பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மா.விஜயபாஸ்கர், பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.மகாலிங்கம், ஓவர்சியர்கள் சங்க மாநிலத் தலைவர் தே.ஆறுமுகப்பெருமாள், சாலை ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித் திட்டத்தை விரிவுபடுத்துதல், சாலை ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு முறையே பணிமேற்பார்வையாளர் உதவிப்பொறியாளர் பதவி உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்றும், இதில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதி வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், மார்ச் 19 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக