| அரசியல் - பொருளாதார மாற்றம் என்பது, ஒரு சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் தனக்கு அனுகூலமான அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தித் தன்வயப்படுத்தும். அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவச் சமூகம், 15ஆம் நூற்றாண்டு முதல் பல வடிவங்களில் உலாவரும் முதலாளித்துவச் சமூகம்வரை அனைத்திலும் இதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். உற்பத்தி முறை மற்றும் அதன் இயல்புகள், சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பிலும் தனது குணங்களை ஒன்றிணைக்கும். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் பின்புலமாகவும் கூட்டாளியாகவும் இருந்த கத்தோலிக்க மதநெறிகளுக்கு எதிராக, அரசியல் - பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உருவான ப்ரொடஸ்டண்ட் பிரிவு, முதலாளித்துவ அமைப்பின் தன்மைகளை உள்வாங்கியதை மாக்ஸ் வெப்பர், ‘The Protestant Ethic and the Spirit of Capitalism’ எனும் நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். இப்படி அரசியல் - பொருளாதார மாற்றம் சமூகத்தின் அமைப்புக்களான மதம், குடும்பம், கல்வி, கலாச்சாரம் என எல்லாவற்றிலும் தனது இயல்பினை நிலையாகப் பதியச் செய்கிறது.
இந்தியாவின் அரசியல் - பொருளாதார மாற்றம்
சுதந்திரத்திற்குப்பின் இந்தியா பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டும் வகையில் ‘Mixed Economy’ எனப்படும் பல்வகை பொருளாதார இயல்புகளை இணைத்த அரசியல் - பொருளாதார கொள்கையைப் பின்பற்றியது. இதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் முதலீட்டின் வாயிலாகப் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, பொருளாதார முன்னேற்றப் பாதையில் பயணித்தோம். இப்படிப்பட்ட அமைப்பில், அரசு முக்கிய பங்கு வகித்தாலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீட்டை மேம்படுத்தும் சிறப்பு அம்சங்கள் கொண்டதே இந்த அரசியல் பொருளாதாரம். தனியார் கைகள் வலுவடையவும், இந்தக் கொள்கையின் முரண்கள் மேலோங்க, உலகப்பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் இந்தியா புதிய தாராளமயக் கொள்கையை 1991இல் பின்பற்றத் தொடங்கியது.![]() 17ஆம் நூற்றாண்டில் உருவான தாராளவாதக் கொள்கைக்கும், 1970 முதல் உலகெங்கும் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளவாதக் கொள்கைக்குமான வேறுபாட்டை அறிவது முக்கியமாகும். பழைய தாராளவாதம் தனிமனிதனை அரசின் தலையீடு இன்றிச் செயல்படுவதற்கான முழுச்சுதந்திரத்தைப் பேணுகிறது. தனிமனிதத் திறனுக்கு அரசின் தலையீட்டை ஒரு தடையாகக் கருதும் இக்கொள்கை, அரசின் பங்கைத் தனிமனித முயற்சியிலிருந்து விலக்கி, அரசு செயல்பாட்டு எல்லையைச் சுருக்கி, தனிமனிதன் மற்றும் தனியாருக்கான எல்லையை விரிவுபடுத்துகிறது. ஆனால் புதிய தாராளவாதம் இதே கொள்கைகளை முன்னிறுத்தி அரசின் செயல்பாடு என்பது தனிமனித முயற்சியில் தலையீடு இல்லாமல் இருப்பது மட்டுமன்றி, எங்கெல்லாம் தனியாருக்கான சந்தை உருவாகவில்லையோ அங்கெல்லாம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சந்தை உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அரசே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அரசின் செயல்ப்பாட்டைப் பழைய தாராளவாதத்தில் எதிர்மறையாகவும் புதிய தாராளவாதத்தில் ஆக்கபூர்வமாகவும் காண முடிகிறது. இதன் வெளிப்பாடாகவே, கடந்த 20 ஆண்டுகளாக, இக்கொள்கையைப் பின்பற்றும் அனைத்து நாடுகளிலும், சமூக மேம்பாட்டிற்கான கல்வி, மருத்துவம் போன்றவற்றில் நிதி ஒதிக்கீடு குறைந்து வரும் போக்கைப் பார்க்க முடிகிறது. இதன் மூலம், மறைமுகமாகத் தனியாருக்கான சந்தையை அரசு உருவாக்கி வருவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
தமிழகமும் புதிய பொருளாதாரமயமும்
இந்திய அரசியலில், மாநிலங்களுக்கு என தன்னிச்சையான அரசியல் - பொருளாதார நிலைப்பாடு என்பது கிடையாது. தமிழ்நாட்டிலும் நடுவண் அரசின் செயல்பாட்டிற்கு ஏற்ப திமுக, அதிமுக ஆட்சியில் புதிய தாராளவாதக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்காகப் பல இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் திராவிடக் கட்சிகள், மிகவும் தந்திரமாகத் தனியாருக்கான தனது சேவையைச் செய்து வருகிறது. இன்றைய தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிப்பது மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வது என்பதை மிகவும் தரம் தாழ்ந்த செயலாகக் கருதக்கூடிய பொதுக் கருத்தை உருவாக்கும், நடுவண் அரசின் செயலை மிகச் செம்மையாகத் திராவிடக் கட்சிகளும் ஆதரித்துச் செய்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக அரசுப் பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் இன்று பராமரிப்பு இன்றி, நிதிப் பற்றாக்குறை காரணமாக தரம் இழந்து, தனியாருக்கான பரப்பளவை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் தனியாருக்கான இடப்பரப்பு, கடந்த 20 ஆண்டுகளாக விரிவடைந்து வருவதையும், அதற்கான அரசின் மறைமுகச் செயல்பாட்டையும் மிகத் தெளிவாகக் காணமுடிகிறது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு சமூக மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் அகில இந்திய அளவில் ஏற்பட்ட தொய்வைத் தமிழகத்திலும் காண முடிகிறது.
சமூக மேம்பாட்டிற்கான நிதிஒதுக்கீடு சதவிகிதம் (Social Sector Expenditure) (தமிழகம்)
மொத்தச் செலவில் கல்விக்கான செலவின் சதவிகிதம் (தமிழகம்)
தொடக்கக் கல்வியில் தனியார் பள்ளிகள்
1990களுக்கு முன்பு தமிழகத்தில் தொடக்கக் கல்வியில் தனியார்ப் பள்ளிகள் மிகச்சிறிய அளவில் இருந்தன. சாதி - வர்க்க வேறுபாடுகள் இருந்தபோதிலும் அரசாங்கக் கல்விக்கூடங்கள் பெரும்பாலான மாணவர்களை ஒன்றிணைக்கும் மையப்புள்ளிகளாக இருந்தன. ஆனால் 1990களுக்குப் பிறகு சமூகத்தில் நிலவி வரும் சாதிய - வர்க்க வேறுபாடுகளை மிகத் தெளிவாக கல்விச்சாலைகள் பிரதிபலிக்கின்றன. இன்று அரசாங்கக் கல்விக்கூடங்கள் என்பன தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள அடித்தட்டு மக்களின் இடம் என்றே அறியப்படுகிறது. பல நேரங்களில் இவர்களும் இந்த கல்விச்சந்தையின் சூட்சமத்தில் சிக்கித் தமது வாழ்நிலை மேம்படும் என்ற நம்பிக்கையில் தனியார் கல்விச்சாலைகளை நோக்கிச் செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளின் சதவிகிதம் (தமிழகம்)
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவிகிதம் (தமிழகம்)
அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியர் சதவிகிதம் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் சதவிகிதம் (தமிழகம்)
கல்வித்தளத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை நாம் புதிய தாராளமயவாத அரசியல் - பொருளாதாரக் கோட்பாட்டினிடையே ஆராயும்போது மாற்றத்திற்கான காரணங்களும் வருங்காலத் திசையும் நமக்குப் புலப்படுகின்றன. சாதி, மதம் மற்றும் வர்க்க வேறுபாட்டினுள் அடைந்து கிடக்கும் நமது சமூகத்தில் அரசின் பின்வாங்குதலும், தனியாரின் எழுச்சியும் மிகவும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இடஒதுக்கீட்டிற்காகக் களமிறங்கும் பல முற்போக்கு குழுக்கள் தனியார்மயத்தின் மூலம் ஏற்படும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.


0 comments:
கருத்துரையிடுக