தமிழகம்
பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்
பதிவு செய்த நேரம்:2015-03-16 17:41:37
திருப்பூர்: வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாமஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் நவநீதன் ஜோசப் 1-ம் வகுப்பு படித்து இவன் சக மாணவர்களுடன் வகுப்பறையில் விசிலடித்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென துடி துடித்து மயங்கி விழுந்தான்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியை உடனடியாக மாணவனை அவினாசி அரசு மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து கதறி அழுதபடியே மருத்துவ மனைக்கு வந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் தகராறில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பள்ளியில் அவினாசி போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்கெட்ச் பேனா மூடியை வைத்து நவநீதன் ஜோசப் விசிலடித்து விளையாடி கொண்டிருந்ததாகவும் அப்போது எதிர்பாராத விதமாக மூடியை விழுங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர்.
பேனாவின் மூடி நவநீதன் ஜோசப்பின் மூச்சுக் குழாயில் அடைத்து உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து பள்ளியிலும், அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக